Saturday, July 2, 2011

புழக்கத்தி​ல் உள்ள சில பழமொழிகளும்​, விளக்கங்களு​ம்!

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்
இந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.
பெண் புத்தி பின் புத்தி
நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக – சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள். பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.
ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா?
பொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே!.
ஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.
பந்திக்கு முந்து படைக்கு பிந்து
வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.
குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்
நம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.
சோழியன் குடுமி சும்மா ஆடாது!
சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.
பசி வந்திட பத்தும் பறந்து போகும்
அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்!
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும்? பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது! ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.
ஆறிலும் சாவு; நூறிலும் சாவு
மகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.
கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்
இந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்
ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.
அடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்
இங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே! நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது

Sunday, June 12, 2011

மானிட உடம்பைப் பெற்ற பயன்


மானிட உடம்பைப் பெற்ற பயன்

உடம்பைப் பெற்ற பயன்
-ஆசான் ஒளவையார்-

உடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்"

உடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.

இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.

நல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.

நமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்

ஈசனைக் காட்டும் உடம்பு"

என்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.

"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே

உள் அகத்து ஈசன் ஒளி"

மனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.
அது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,

""பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே

நூலின் கண் ஈசன் நுழைந்து"

பாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.

மற்றுமொரு உதாரணம்

"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்

ஈசன் நிலை துதி செய்து கூறினால்"

ஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்
எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.

ஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.

"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்அனைத்துயிர்க்கும் தாளும் அவன்"

ஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.

இரண்டாம் குறள்

யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.

இதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.


"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்

மாறில் தோன்றும் பிறப்பு''

பரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.

Monday, June 6, 2011

பசுவை ஏன் வழிபட வேண்டும்?

இந்த உலகில் பசுவின் உடலில் மட்டுமே சகல இந்து தெய்வங்களும் குடிகொண்டுள்ளன.
கடுமையான பாவங்களிலிருந்து மீள பசுவிற்கு ஒருமுறை மட்டும் உணவுஇட்டால் போதும் என்பது ஒரு ஜோதிடப்பரிகாரம்.

காசுபோட்டால் பெப்சி,கோலாபானங்கள் குடிக்கலாம் என்பது மாதிரியான தானியங்கி யந்திரங்கள் வெளிநாடுகளில்பிரபலம்.ஆனால்,ஜப்பானில், இத்தகைய இயந்திரங்களில் பசுவின் பால் கிடைக்கிறது.காரணம் அங்கு ஆரோக்கியம் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்ச்சி!!!

இந்தோனிஷியாவில் இறந்தவர்களை எரிக்கும்போது ,ஒரு காகிதத்தில் பசுவின் படத்தை வரைந்து அதையும் இறந்தவர் உடலுடன் சேர்த்தே எரிக்கிறார்கள்.பசுவின் உதவியால் அவர் சுவர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கை.

பாலியில் இறந்த பசுக்களை கவுரவமாக இறுதிச்சடங்குடன் எரிக்கிறார்கள்.

கிரேக்க நாட்டு சிக்கந்தர்லோடி(அதாங்க வரலாற்றில் படித்திருப்போமே)பாரதத்தின் மீது படையெடுத்துவிட்டுத் திரும்பும்போது,தன்னுடன் சுமார் 1 லட்சம் உயர்ஜாதிப்பசுக்களையும் ஓட்டிச்சென்றுவிட்டான்.காரணம்,அந்நாட்டின் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு.

பசுவின் சிறுநீர் போன்ற கிருமிநாசினியை நம்மால் விஞ்ஞானரீதியாக உருவாக்கிடமுடியாது.அதன்மறுபெயர் கோமூத்திரம் ஆகும்.கோமூத்திரத்தை சிறிதுதலையில் தெளித்துக் கொள்வதே கங்கையில் குளித்தபலன் ஆகும்.

பசுவைப் பூஜித்தால் மும்மூர்த்தி தெய்வங்களான பிரம்மா,விஷ்ணு,சிவன் இம்மூவரையும் பூஜித்தபலன் கிடைக்கும்.
கி.பி.1947 ஆம் வருடம் 1000 மனிதர்களுக்கு 450 கால்நடைகள் நமது பாரதத்தில் இருந்தன.இது தற்போது கி.பி.2009இல் 1000:50 ஆகக் குறைந்துவிட்டது.அடுத்த நான்கைந்து ஆண்டுகளில் இது 1000:20 ஆகக்குறைந்துபோகக்கூடும்.

பசுவுக்கு ஒரே ஒரு முறை அகத்திக்கீரை தானம் செய்தாலே நாம் இப்பிறவியில் செய்த கடும் பாவங்கள் தீர்ந்துவிடும்.

பசுவை ஒரு முறை வலம் வந்தால் இந்த உலகை ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம்.

பசுவசிக்கும் மாட்டுத்தொழுவத்தில் பசுவின் அருகில் அமர்ந்து ஜபிக்கும் மந்திரங்கள் மற்றும் தர்மகாரியங்கள் நூறுபங்கு பலன்களைத் தரும்.

இன்னும் சில ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு ஏற்படப்போகும் நாகரீக வளர்ச்சியால் சில இயற்கை மாறுதல் ஏற்படும்.இதனால்,இந்த உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் வெளியிட்டுள்ள ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை தெரிவிக்கின்றது.
பசுவைக் காப்போம்;ஒரு பசுமடம் அமைத்தால்,அதில் நான்கு பங்கு லாபம் கிடைக்கும்.

Wednesday, June 1, 2011

சித்தர்கள் காட்டிய உடம்பெனும் ஆலயம்...!

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்..!

'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
-ஆசான் திருமூலர்-

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.


"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,

"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).

கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-ஆசான் வள்ளலார் - 14.

குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

Thursday, May 26, 2011

வாழ்க்கை.

அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்று தெரியாமல் நகர்ந்துகொண்டே இருப்பதுதானே வாழ்க்கையின் சாரமே. எதன் பொருட்டும் எவர் பொருட்டும் எந்த சமரசங்களுக்கும் இடம்கொடாமல் ஒரு மாய நதியைப்போல நம்மைச் சுற்றிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது வாழ்க்கை.

-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

  1. குழந்தையிடம் தாயின் பாசம்,
  2.  கணவனிடம் மனைவியின் காதல்,
  3.  பணத்திடம் கருமியின் பற்று- 
  4. இந்த மூன்றும் ஒன்றுசேர்ந்தது போன்ற அன்பை உன்னால் இறைவனிடம் செலுத்த முடியுமானால் அந்தக் கணமே இறைவனைக் காண்பாய்.-ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Wednesday, May 25, 2011

ஒரு தனி உயிர்ரும் மானமும்

நாம் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் பெண்ணை அடிமையாகவே ஒருவனுடைய சொத்தாகவே கருதுகிறோம் என்பதோடு பெண்ணை நமது போக பொருளாகவே கருதுகிறோம். அதற்கு ஒரு தனி உயிர்ரும் மானமும் இருப்பதாக கருதுவதில்லை.